Saturday, 25 January 2025

மது விலக்கு

வியர்வை சிந்தி

     உழைத்த பணம்

வீடு வருவதில்லை

     விற்று தீர்ந்த

கணக்கு நம்

     வியப்பை குறைத்ததில்லை...!


ஊர் மதிக்க

        வாழ வெண்டுமென்று

வளர்த்தெடுத்த 

        பிள்ளை - இன்று

வீதியிலே கிடக்க

        தன்மானம்  கூட 

மிஞ்சலையே

        வற்றிய கண்ணீரில் 

வாழ்வு மாற

       தவம் கிடக்கும்

பெற்றோர்...!


இளம் வயதிலேயே

      வாழ்வைத் தொலைத்த

பெண்களின் 

       எண்ணிக்கை - இங்கு

குறையாவிட்டாலும் - அரசு

       விற்பனை சரியில்லையென்று

வீதியெங்கும் 

       விரிவாக்க மறப்பதில்லை...!


தனைமறக்க

      ஏற்றுக்கொள்ளும்

போதையும்

      தடுக்க நினைக்காத

 அரசியல்வாதிகளின்

      சுயநலமும்

தடம் புரண்ட

     இளைஞர்களின்

சுய வாழ்வின்

     புதைக் குழி...!

Saturday, 5 June 2021

அலையும் கரைதலும்

 தாழ்வாய் பறக்கின்ற
        புறாக்களும்
தனைமறந்து களிக்கின்ற
       மனிதக் கூட்டமும்...!

மேற்கே மறைகின்ற
       வேலையில்
அலைகளின் ஆராவாரத்தில்
       முறிந்து போகின்ற
கதிரவனின் 
       கதிர்வீச்சு...!

பாதுகாப்பென
      வட்டமிட்டு பறக்கின்ற
இரும்பு பறவைகளும் - அங்கே
     இருகிய மனமும்
இலகுகின்ற சிறுவர்களின்
     பொன் சிரிப்பும்...!

விதையின்றி பூத்திருந்த
      மேகப் பூக்களும்
விரைந்து வட்டமிட்டு 
      பறந்து மறைகின்ற
பருந்து கூட்டமும்...!

உயிரின்றி 
     உருண்டு வந்த மரக்கட்டையும்
உற்சாகமாய் 
     பின் தொடர்ந்த 
சிறுவர் கூட்டமும்...!

கண்ணீர் துளியில் 
     கரைந்த  கனவுகளும்
காலம் பதில்
    சொல்லுமென்று காத்திருந்த
இரவுகளின் வலிகளும் - இங்கு
     வந்து செல்லும்  
அலைகளில் 
     கரைவதாய்...!

Saturday, 4 July 2020

குளக் கரையும் புயல் காற்றும்

மின்னல் கீற்று 
     வானம் கிழித்து அம் 
மலை முகடுகளில் 
      மறைந்தது...!

மிதமாய் 
      பொழிந்த மழை 
திசை மாறி 
       பேய் மழையாய்
மெய் சிலிர்க்கச் 
        செய்தது... !

தறிகெட்டு படிகளில் 
       உருண்டு வந்த 
தகரம் போல்
       தாறுமாறாய்
ஒலி எழுப்பி 
        உள்ளம் உறையவைத்து 
 மறைந்த விட்ட
         இடி முழக்கம்... !

கனத்த குரலில் 
‌        கரைந்தபடி கூடுகளை 
தேடிச்சென்ற 
        காக்கை கூட்டம்..!

கரையோரம் முறிந்து 
       விழுந்திருந்த 
எருக்கம் 
        பூக்கள்... !

ஆற்றுப்படுத்த 
        யாருமில்லையென்ற 
 தொனியில் 
        மீண்டும் மீண்டும்
  கரையை மோதிச் 
         சென்ற அலைகள்...!

இரையைத் 
        தேடி தேடி 
 இறகு வலிக்க 
        பறந்து திரிந்த
கொக்குகள்...!

பாதி மூழ்கி 
          மீதியில்
மூச்சுவிடும்
           சலவைக் கல்...!

முறிந்த கிளையுடனும்
         சருகாய் - தரையில் 
 விரிந்த
         கனிகளுடன் 
கண்ணில் பதிந்த - அக்
         கரையின் காவலனாய்
தலைமுறை கடந்த 
         ஆலமரம்...!

Tuesday, 30 June 2020

வேலி

அரணைக்  காக்க
       அங்கே
ஆருயிர்  துறக்கும்
        அன்பு நெஞ்சங்கள்...!

மனிதமில்லா
      கூட்டம் இங்கே
 மனிதப்
      பாதுகாவலனாய்...!
   
கண்களில் எரியும்
      நெருப்புடன்
ஆக்கிரமிப்பை
       விலக்கிக்கொள்ள
 ஆணையிடும்
        அணிவகுப்பு...!

கலந்துவிட்ட
       கலப்பினில்
கண்ணிமையும்
      கரையானாகிவிட
வழிகின்ற
        கண்ணீர் துளிகள்..!

நடுங்கும் குளிரிலும்
       நொடியினில் மறையும்
நடைபாதை சூழலில்
      ஆயுதம் ஏந்தும்
 தேசபக்தி...!

நட்பினில்
       கைகோர்க்க  வேண்டிய
கரங்கள் - இன்று
       நலிந்தவர்களை
நசுக்குகின்ற
      நடைமுறையில்..!

எதை  இழந்தாலும்
        மனிதமிங்கே
வாழவேண்டுமென்ற
        நிலைமாறி...!

எதை   இழந்தேனும்
       செல்வம்  சூழ
வாழ  வேண்டுமென்று
       பயணிக்கின்றோம் ...!

Sunday, 24 May 2020

இயற்கையும் மனிதனும்

இலை கொடிகளுக்கு
      உயிர் கொடுத்த
மழைத்துளிகள்
      மெல்ல மெல்ல அதன்
சலசலப்பை கூட்டி சென்ற
      தென்றல் காற்று...!

கூடுகள் தோறும்
        பிஞ்சிப் பறவைகளின்
கீச்சுக் குரல்
       இரைதேடச்செல்லும்
தாய் பறவையின்
       பிரிவு தாளாமல்...!

கண்ணுக்கு தெரியாத
        விஷக்கிருமியில்
காற்றும் விஷமாகும்
        வருத்தத்தில்
மனித இனம்
         பயந்து கிடக்க...!

வாழ்வு என்று முடியும்
          வருத்தமில்லா
தோரணையில்
           இயற்கை மட்டும் - தன்
இயல்பு மாறாது
        மாறிக்கொண்டிருக்கிறது...!

வாழத் தெரியாத
       வழித்தடத்தில்
மனித இனம்
        வதை பட்டிருக்க
எத்தனையோ
         யுகங்கள் கடந்த
 பட்டறிவுதான்
        உந்தன் சாந்த
சாம்ராஜ்ஜியத்தின்
        வெளிப்பாடோ...!

Friday, 22 May 2020

வழித்தடம்

பூத்த மலர்கள்
        கனத்த காற்றின்
வலிமையில்
       வழியெங்கும்
சிதறிக்கிடக்க...!

காலைப் பொழுதின்
        புத்துணர்ச்சியில்
கீச்சுக்குரல் இட்டு
        இங்கும் அங்கும்
ஓடித்திரிந்த
        அணில் பிள்ளை...!

மென் பனி
        விலகி
கதிரவன்
         மென் ஒளியை
கிரகித்து
        புன்முறுவல் பூத்த
இலைகளின்
        புதுவரவு...!

மின்னுகின்ற
       வழித்தடத்தில்
வரிசையாய்
       வந்து நின்ற
மகிழ்வுந்துகளும் அதன்
       முன்விளக்கு
ஒளி பட்டு
       பிரதிபலித்த
நல்வரவு
        வாசகமும்...!

Saturday, 9 May 2020

ராஜ ராஜ சோழன்

கடல்  கடந்தும்
     தன் கொடி 
நிலைநாட்டிய
     போர்  வாள்...!

அன்புக்காக
     அரியணை 
துறந்த
      இளம்  துறவி..!

எம் மதமும்  
     சம்மதமென
வாழ்ந்து  சென்ற
    வள்ளல்..!

நட்புக்காக  தன்
      உயிரையும்
துச்சமென
      நினைத்த சமுத்ரா
தேவியின்  மகன் ...!

வறுமையின்றியும்
       வான்முட்டும்
கோபுரமைத்த
       உலக விந்தை ...!

மக்கள்
        மனதிலும் தன் 
தாய் தந்தையர்  
       இருதயத்திலும்
நீங்காமல் நிலைத்திருந்த
       கோமகன்..!

தரணியின்
      பொற்காலம்  தோன்ற
அப்பொன்னி தேவியே
        உயிர்  கொடுத்த
தவப் புதல்வன் ...!

Thursday, 7 May 2020

அருவி

தூங்கும் அருவியும்
         துயில் கலைக்கும்
காலைக் கதிரவனும்
        தோகை விரித்து நின்ற
மயிலும்
         தோன்றி மறைந்த
வானவில்லும்...!

விட்டு விட்டு
      பொழிகின்ற
வானிலையும் அங்கே
      மென்மையாய்
ஷ்பரிசம் தொட்டு
      செல்லும் - ஈரக்
காற்றும்...!

மலை மீது மோதி
     திரும்புகின்ற
மேகங்களும்
     திசைமாறாமல்
பயணிக்கின்ற
     நதி நீரும்...!

துள்ளிக் குதித்தோடும்
      மீன் குஞ்சுகளும்
மவுனமாய்
      தூரத்தில் இரை தேடி
காத்திருக்கும்
      முதலையும்...!

நீண்டு நெடுந்துயர்ந்த
       மரங்களும்
தன் கூட்டருகே
      பறந்து வந்த
பருந்து கண்டு
     ஆர்பரிக்கும்
பறவைக்  கூட்டமும்...!

தாயின் முகம்
     பார்த்து
புன்னகைக்கும்
      குழந்தையும்
மனம் மயங்கும்
      வண்ணத்தில்
புதிதாய்
       பிறந்திருந்த
பூக்களும் சேர்ந்து
      வனப்பூட்டின
அவ் வான்மகளின்
     குழந்தைக்கு...!

Friday, 21 December 2018

முல்லிவாய்க்கால்

திரும்பிய
      திசையெங்கும்
தீண்டிய
      தோட்டாக்கள் - உன்னை
துளைத்தெடுத்தும்
      திரும்பி ஓடா
போர் குணம்...!

துரோகத்தில்
       திகைத்து
மரணத்தை
       தழுவினாலும்
மண்ணை
      விட்டுத்தராத - உந்தன்
மனித மாண்பு...!

பிரிந்த உன்
     மூச்சுக்காற்று
சலசலத்தது -  தாய்
      மண்ணின் மீது - நீ
கொண்ட காதலின்
      கதை சொல்லி...!

தேடல் இருக்கும் வரை
      வாழ்வு முடிவதில்லை
விடியல் இருக்கும் வரை
      வீரம் வீழ்வதில்லை
வரலாறு இருக்கு மட்டும்
       உங்கள் கால்தடம்
மறைவதுவுமில்லை...!

Friday, 11 May 2018

இருள் உலகம்

அரை நிலவும்
        அன்றதனை
சூழ்ந்து நின்ற
         நட்சத்திர ஒளியும்
சலவைக்கல் பதித்த
        மதில் சுவராய்
இரவென்னும்
         கோட்டையில்...!

இடைவிடாது
        பொழிகின்ற
பனித்துளியும் - அப்
        பகலவன்
விட்டு சென்ற
       கதகதப்பை
இறகுக்குள்
       இருக்கிக்கொண்ட
பறவைக்
       கூட்டமும்...!

மெல்ல மெல்ல
       ஸ்பரிசம்
தொட்டு சென்ற
       தென்றலும் - அங்கே
மென்மையை
        மெருகேற்றும்
தென்னையின்
       கீற்றுக்கிடையேயான
ஒளி முறிவும்
       அழகாகிற்று - இவ்
இருள் உலகை...!

Saturday, 17 February 2018

திரிபு

அணிந்து வந்த
        நாகரீக வேடமும்
மறந்துவிட்ட
       மனித மாண்புகளும்
மிருகம் ஆக்கிற்று
      அன்று அவரை...!

தன் தோழியுடன்
      விளையாட்டில்
தொலைந்து போய்
      தன்னை அறியாது
அவர் மேல்
      விழுந்ததில்
தூக்கி ஏறியப்பட்டு
       துடி துடித்த
நாய் குட்டி...!

வர்ணனைகள்
     கலைந்த முகம்
கண்களில்
     வழிந்தோடிய கண்ணீர்
துடிக்கின்ற
      தன் தோழனை
வாரி அனைத்துக்கொண்ட
     சிறுமி...!

அன்று வாடிய கொடிக்கு
       தேர் கொடுத்தோம்
இன்று சலவை செய்த
      ஆடைக்குள்
அழுகிய மனங்கள்
      வளர்க்கிறோம்
நாகரீகம்
     என்று சொல்லி...!

Saturday, 25 November 2017

மண்ணுலகம் (ம) பூமி

பகலவனை
       பிரிந்தாலும்
இட வலமாய்
       சுழன்றாலும்
இருள் பகலாய்
       தொடர்ந்தாலும்
 ஊன் உயிர் வாழும்
       கருவறை நீ...!

நிலமும்
      நீலக்கடலும்
இம்மலையும்
      காடுகளும் - அவ்
வறண்டு விட்ட
      வனங்களும்
நீ உடுத்திய
      வண்ண உடைகள்...!

ஆழ்கடலென
       தாழ்வதும்
இமையமாய்
     வளர்வதும்
அக்னியாய்
      எரிப்பதும்
சூறாவளியாய்
       சுழல்வதும்
கார்மேகமாகி
       பொழிவதும்
உந்தன் சமநிலையின்
       வெளிப்பாடு...!

விழுந்தாலும்
       இங்கேயே
விதைக்கப்பட்டவர்களாய்
       வாழ்கிறோம்
உந்தன்
      கண்ணிமைக்குள்...!

Friday, 9 June 2017

மண்தான் நமது பலம்

அன்னமிட்ட தாயின்
       கருவறை அறுக்கும்
அரங்கேற்றம் - இன்று
      கதிராமங்கலத்தில்...!

கண்ணிருந்தும்
      குருடனாய் - நாம்
வரவேற்கும் மற்றுமொறு
       சோமாலியா
 என்றோ
       விலைப்போன
  நம் ஒற்றை
       துருப்புச்சீட்டால்…!

மண்தான்
      நமது பலம்
அச்சடித்த
     காகிதமல்ல
காலத்தே
      பொழிகின்ற மழைதான்
நமது  வளர்ச்சி
      மாற்றமே  உருக்கொண்ட
அட்டவணையில்
      மேலெழுவதல்ல…!

Saturday, 3 June 2017

நடை வண்டி

ஒளித்துகள்கள்
       அங்கு திரையிட
சந்திரத் தென்றல் என
       பொறிக்கப்பட்ட
மைல் கல் - அருகிலே
        தலை நிமிர்ந்து
கொக்கரித்த சேவல்...!

தெருவெங்கும்
        அராவாரம்
திண்ணைதோறும்
       முதியவர் கூட்டம்
திசையரியா
       மழலையின்
முகம் நனைத்த
       கண்ணீர் துளி...!

முகம் பார்ப்பதற்குள்
       முழுதாய் நேசித்தவள்
ஓடிவந்து
       விட்டுச் சென்ற
 நடை வண்டி...!

பகலவனை கண்ட
      பனித்துளியாய்
தொலைந்து போன
      கண்ணீர் துளியும்
நடை பழகிய
     கால்களில்
வலுத்துவிட்ட  உற்ச்சாகமும்...!

Saturday, 28 January 2017

எழுந்து வா

எழுந்து வா தமிழா
        எழுந்து வா...!

உனக்காக
        அழுகின்ற கண்கள்
உந்தன் வீரம்
        பேசும் தூரம்
வெகு தொலைவில்
         இல்லை...!

ஏந்திய தழும்புகள்
       காலம் தாண்டியும்
உன்னில் உறைகின்ற
      போராட்டக் குணத்தின்
காலச் சுவடுகள்...!

பகையினை
       மறந்துவிடு - அது
சுயநலத்தின்
      உச்சம் - நீயோ
நற்சமுதாயத்தின்
      விருச்சம்...!

எழுந்து வா தமிழா
        எழுந்து வா...!

Friday, 20 January 2017

உரிமை போராட்டம்

உரிமைகள் மறுக்கப்பட்ட
      உணர்வுகளில்
இணைந்துவிட்ட  நெஞ்சங்கள்
      உருவம் கொடுக்க
நினைவிலிருந்து நீங்காத
      அறப் போர்...!

மண் சார்ந்த
     மரபுகளை
மீட்டெடுக்க
     எழுச்சிக் கொண்ட
சமூகம்...!

பொதுவுடைமைகள் -  இங்கு
       உடைக்கப்படவில்லை
அரியணையின்
        இறுகிய  மனங்கள் மட்டும்
கரைக்கப்படுகின்றன...!

அன்றாடம் வாழ
      வழி செய்தவனின்
வீழ்ச்சி  - இங்கு
      வேண்டாமென
வலுக்கின்ற
        போராட்டம்...!

Friday, 25 November 2016

வசந்தம் வரும்

வரம் கிடைக்கு முன்னே
      விரதமெனும் வதைபாடு
இருள் விலகும் முன்னே
      வளம்வரும் சலசலப்பு
நன்மையின் தொடக்கத்தின்
      தீய்மையின் துடிதுடிப்பு...!

வலி உள்ளவர்களின்
       கூச்சல் குரல்
 தினம் தினம் - இங்கு
       ஓங்கி ஒலிக்க...!
   
வதைபடும் கூட்டத்தின்
       கண்களில்
ஏற்றிவத்த கனவுகள்
      கலையாமல்
காக்கின்ற தலைவனின்
      கரங்களின்
வலிமை கூடட்டும்...!

 கருப்பு தாள்கள்
        இங்கு குறையுமோ
இல்லையோ
       எற்றத் தாழ்வுகள்
குறைகின்ற பாதையின்
      முதல் அடி - இன்று
வலியானாலும்
     வசந்தம் வரும்...!

Wednesday, 13 April 2016

மருத்துவம்

இருகண்ணும்
       தொலைந்து போகும்
மை இருட்டு
      இடைவிடாது
கொட்டிச் சென்ற
       கோடை மழை...!

தீண்டிய நாகத்தின்
      திசையறியா
திகைப்பு - அங்கே
     வேய்ந்துவிட்ட கூரை
ஈரக்கற்றில்
     உருவாக்கிய சலசலப்பு...!

யாருமற்ற சாலைகள்
      எமனது வருகையென
ஓலமிட்ட
      மக்கள் கூட்டம்...!

தோகையின்றியும்
      வாசல் வந்த
தேவதை  - துடைத்துச்
       சென்ற கண்ணீர்
துளிகள்...!

Tuesday, 6 October 2015

மருந்து

விடியும் முன்னே
      ஏற்றிவைத்த தீபங்களாய்
அந் நட்சத்திரக்
     கூட்டம்...!

காலைக் கதிரவனின்
     கதகதப்பில்
மறைந்து போகும்
     பனித் துளிகள்...!

மேகம் கறுக்கு
    முன்னே
தோகை விரித்த
     மயில்...!

துலாபாரத்தில்
    வீற்றிருந்தும்
விடாமல் புன்னகைத்த
    சிறுமி...!

தோற்றம் தாண்டி   
     தோள் கொடுக்கும்
தோழனும் - அங்கே
     உயிர் காக்க
ஏழை கொடுத்துவிட்ட
    ஒரு குவளை
தண்ணீரும்...!

Sunday, 6 September 2015

இயற்கை தந்த நம்பிக்கை

மின்னும் 
     வானிலை
மிதக்கும் 
    மேகங்கள்...!
   
நிசப்த 
    நிலம்
நீர் வழி 
    வந்ததில்
காற்று 
   சுமந்து வந்த
ஈரப்பதம்...!

பசுமை  
    ஆடை உடுத்திய
வயல் 
    வெளிகள்
கூடு தேடி 
   பறந்து சென்ற
வெண் புறாக்கள்...!

வெட்கத்தில் 
   பாதி முகம் 
காட்டும்
   பிறை நிலவு
மையிருட்டில்
     விளக்கேற்றுவதாய்
மேற்கே
   முளைத்திருந்த வெள்ளி்...!

இருள்
    கவர்ந்தும்
விடியல்
    வருமென
இயல்பாய்
    நெஞ்சுக்குள்
நிலைத்திருந்த
    நம்பிக்கை...!