தூங்கும் அருவியும்
துயில் கலைக்கும்
காலைக் கதிரவனும்
தோகை விரித்து நின்ற
மயிலும்
தோன்றி மறைந்த
வானவில்லும்...!
விட்டு விட்டு
பொழிகின்ற
வானிலையும் அங்கே
மென்மையாய்
ஷ்பரிசம் தொட்டு
செல்லும் - ஈரக்
காற்றும்...!
மலை மீது மோதி
திரும்புகின்ற
மேகங்களும்
திசைமாறாமல்
பயணிக்கின்ற
நதி நீரும்...!
துள்ளிக் குதித்தோடும்
மீன் குஞ்சுகளும்
மவுனமாய்
தூரத்தில் இரை தேடி
காத்திருக்கும்
முதலையும்...!
நீண்டு நெடுந்துயர்ந்த
மரங்களும்
தன் கூட்டருகே
பறந்து வந்த
பருந்து கண்டு
ஆர்பரிக்கும்
பறவைக் கூட்டமும்...!
தாயின் முகம்
பார்த்து
புன்னகைக்கும்
குழந்தையும்
மனம் மயங்கும்
வண்ணத்தில்
புதிதாய்
பிறந்திருந்த
பூக்களும் சேர்ந்து
வனப்பூட்டின
அவ் வான்மகளின்
குழந்தைக்கு...!
No comments:
Post a Comment