Tuesday, 9 August 2011

கண்முன் தோன்றிய கானல் நீர்

தாயின் அன்பினில்
       தரணியில் தவழ்ந்து
உள்ளக் கதவுகளில்
        உள்ளாசப் பறவையாய்
உள்ளார்ந்த அறிவில்
       அன்றலர்ந்த செந்தாமரையாய்
சொந்தம் கொண்டாடியவன்
       கொண்டு வந்த
பெண்மை பயனற்ற பந்தம்...

பாதகியின் செயலால்
       பால்முகம் கலங்கி
அறுந்து போன -உன்
       இதய நரம்புகளுக்கு
ஆறுதல் கூறா
       எங்களை விலக்கி
எங்கிருந்தோ தன்னை
       தேடிவந்த நண்பன் என நீ
ஏற்ற மயக்கங்களுக்கு
       உண்மை நண்பனாய்
சமர்ப்பனம் செய்தாய் 
       உன்னையே....

இறக்க துடித்தவன்
    மறக்க முடியா துயரம் உன்
வாழ்வில் விரிந்த மொட்டுகள்....

விளக்கு ஏற்றாமல்
       எரியூட்டப்படுவேனோ என
ஏக்கத்தில் விழுந்தும்
       உழுது பயிரிட்டு சென்றாய்
மொட்டுகள் மலர்ந்திட....

அன்று
       நீ கலங்கரை விளக்குதான்
இன்று
       நீ சூரிய வெளிச்சம்
அன்று
      நீ தந்தை தான்
இன்று
      நீ அவர்கள் வழிபடும் தெய்வம்...



No comments: