Saturday, 16 February 2013

பயனற்றவை

ஆணி வேருடன்
        பிடுங்கி எறிந்து விட்டு
மரத்தில் நிழல் தேடும்
        மனிதமும்...!

கருவினில் சிசுவினை
        பறிகொடுத்த
தாயினை போல்
       கலங்கி நின்ற காற்றும்...!

விடைதெரியா வாழ்வில்
        விடை என
விட்டு விட்டு
        பொழிகின்ற வானிலையில்
விதைக்கப்பட்ட
         விதையும்...!

வளர்ச்சியென
         தன்னை மட்டும்
வளர்த்து குளத்தின்
        சூழலை மாசு படுத்தும்
நீலப் பசும் பாசியும்...!

பாதை முழுவதும்
       தெளிக்கப் பட்டாலும்
பயனற்றவையே...!

Friday, 15 February 2013

புன்னகை

எளிமையான வாழ்வினை
          நிரப்ப வந்த
எதார்த்த நண்பன்...!

மருந்துகள் அல்லாத
        மனித வாழ்விற்க்கான
மருத்துவம்...!

பூத்தம் புதிதாய்
        பூத்த பூவின்
மலர்ச்சியிடம் - போட்டியிட்ட
        மனிதத்தின்
ஒற்றை ஆயுதம்...!

Saturday, 2 February 2013

சுயநலம்

அரசு

   நாவிற்க்கு அடிபனியா     
           கருத்துக்கு கருத்தடை
   மன சாந்திக்கு
           மக்கள் கூட்டத்தின்
   குருதிப் புனல்...!

மக்கள்

   வந்தது நமக்கில்லை
         வன்மையை வசைபாட - என
   வாழத் தொடங்கினோம் - இன்று
         வருங்காலம் நமக்கில்லை
    நாணயத்தில்
         நசுக்கப்பட்ட நாயகன்கள்...!

நிலமை
 
   உலகமறியும் இந்தியனை
         இடம் பெயரச் சொல்லும்
   மாற்றம்  இந்த மண்ணில்
         மதத்தினை மதில் மேலேற்றி
   மனிதத்தை
         மண்ணுக்குள் புதைக்கின்ற
   சுய நலத்தின்
         சுடுகாடாய்...!

Saturday, 26 January 2013

மாலை மயக்கம்

அரை முற்றத்தில்
          முழு முகம் காட்டும்
வெண்ணிலவு - அதன்
          அழகின் மயக்கத்தில்
முத்தமிட்டுச் செல்லும்
          இரும்புப் பறவை...!

வானத்தின் வனப்பில்
         வட்டமிட்டு இறகடித்துப்
பறக்கும் புறாக்கள் - அதன்
         இறகில் குடிகொண்டு
வாழத் துடித்து
         படபடக்கின்ற கண்ணிமைகள்...!

வீதியெங்கும் விட்டுவிட்டு
        எரிகின்ற மின்விளக்கு
போட்டியிட்டு விழி திறக்கின்ற
        விண்மீன் கூட்டம்...!

Friday, 25 January 2013

இரு துருவம்

நாடி பிடித்து பார்க்கா
        நாசிக்குள் நுழைக்கின்ற
சுவாசக்காற்றாய்
         உறவுகள்...!

உண்மையாகும் போது
        உயிர் வாழும்
உடல் நரம்பில் கலந்துவிட்ட
       மூச்சுக் காற்றாய்...!

மூழ்கிப் போகையில்
        உருத்துவிட்ட வலியில்
தொட்டுவிட்ட மென்மையால்
        துரத்தியடிக்கப் பட்ட
தும்மல் காற்றாய்...!