Wednesday, 10 August 2011

உண்மைத் தேடல்

பச்சைக் கிளியின்
     சிறகில் அமர்ந்தேன்
உதறிற்று தன்
     சிறகின் கறையென்று.....

பனைக் குறுத்தின்
     திணவுகளாக
மயிலிறகின் மென்மையை
      உணரச் சென்றவன்
உறைந்து போனேன் - அதன்
       உணர்வற்ற வார்த்தைகளில்....

மூடிய தாமரை மொட்டில்
      தரை இறங்கினேன்
காதலியை காண வந்தவன்
      கனலால் கருக்கினான்...

நீரின் ஓட்டத்தின்
     எதிராய் ஓடினேன் - அந்த
மலையருவியின் பிறப்பிடத்தில் - அவர்கள்
      காதலின் இரகசியம்
பித்தனாக்கிற்று என்னை...

எல்லாம் என்னை
       துரத்திற்று
என் தாய் மடியில்
       தலை சாய்ந்தேன்
வாரி அனைத்துக் கொண்டாள் - தன்
       வான்லோகக் கங்கையென்று....


Tuesday, 9 August 2011

கண்முன் தோன்றிய கானல் நீர்

தாயின் அன்பினில்
       தரணியில் தவழ்ந்து
உள்ளக் கதவுகளில்
        உள்ளாசப் பறவையாய்
உள்ளார்ந்த அறிவில்
       அன்றலர்ந்த செந்தாமரையாய்
சொந்தம் கொண்டாடியவன்
       கொண்டு வந்த
பெண்மை பயனற்ற பந்தம்...

பாதகியின் செயலால்
       பால்முகம் கலங்கி
அறுந்து போன -உன்
       இதய நரம்புகளுக்கு
ஆறுதல் கூறா
       எங்களை விலக்கி
எங்கிருந்தோ தன்னை
       தேடிவந்த நண்பன் என நீ
ஏற்ற மயக்கங்களுக்கு
       உண்மை நண்பனாய்
சமர்ப்பனம் செய்தாய் 
       உன்னையே....

இறக்க துடித்தவன்
    மறக்க முடியா துயரம் உன்
வாழ்வில் விரிந்த மொட்டுகள்....

விளக்கு ஏற்றாமல்
       எரியூட்டப்படுவேனோ என
ஏக்கத்தில் விழுந்தும்
       உழுது பயிரிட்டு சென்றாய்
மொட்டுகள் மலர்ந்திட....

அன்று
       நீ கலங்கரை விளக்குதான்
இன்று
       நீ சூரிய வெளிச்சம்
அன்று
      நீ தந்தை தான்
இன்று
      நீ அவர்கள் வழிபடும் தெய்வம்...



Friday, 5 August 2011

நிலையாமை

நினைப்பது நடப்பதில்லை
         நடப்பதை நினைப்பதில்லை- என்றாலும்
நிலையான சுகம் தேடும்
        நெஞ்சத்தின் நினைவுகள் மட்டும்
நிலையானதாய்...


Thursday, 4 August 2011

பற்றுக்கோடுகள்

தோற்றம் தெரியாது
         தொலைகின்ற இதயத்தின் உணர்வுகள்....

எல்லையற்ற ஆசைகளின்
         ஆரம்பப் புள்ளியும் இறுதியும்....

வலையில்லாமல் கூண்டுக்குள்
        வைக்கும் அன்புப் பிணைப்பின்
                 ஒற்றை நாரிதழ்....

வாழ்வில் என்றோ
          மடிந்து போன மழலைப் பருவமும்
                   மனதின் பூரிப்பும்......

நினைவுச் சிலையின் உயிரோட்டமான
         தாயின் கருவறை கன நிமிடங்கள்......

இப்படி எத்தனை எத்தனையோ
       வண்ணக் கோடுகளின்
 எல்லை அறியா ஏமாற்றமும்
             என்றும் தணியா தாகமும்
வாழ்வின் உயிர் நாடியாய்
          நம் இதயதுடிப்பிற்கு
உணர்விருக்கும் வரை...


Wednesday, 3 August 2011

நிவாரணம்

கொத்தளத்தில் அமர்ந்திருந்த
         வெண்குருவி குறி சொல்லிற்று
"உங்கள் இடர் நீங்கி
         குலம் செழிக்குமென்று"............

இங்கே இருள்  நீக்கப்படவில்லை
         வறுமையின் உடல் காப்பாற்றப்பட்டது
                   வாக்கிற்கு வறுமை வந்து விடுமோ என..............