Friday, 22 May 2020

வழித்தடம்

பூத்த மலர்கள்
        கனத்த காற்றின்
வலிமையில்
       வழியெங்கும்
சிதறிக்கிடக்க...!

காலைப் பொழுதின்
        புத்துணர்ச்சியில்
கீச்சுக்குரல் இட்டு
        இங்கும் அங்கும்
ஓடித்திரிந்த
        அணில் பிள்ளை...!

மென் பனி
        விலகி
கதிரவன்
         மென் ஒளியை
கிரகித்து
        புன்முறுவல் பூத்த
இலைகளின்
        புதுவரவு...!

மின்னுகின்ற
       வழித்தடத்தில்
வரிசையாய்
       வந்து நின்ற
மகிழ்வுந்துகளும் அதன்
       முன்விளக்கு
ஒளி பட்டு
       பிரதிபலித்த
நல்வரவு
        வாசகமும்...!

Saturday, 9 May 2020

ராஜ ராஜ சோழன்

கடல்  கடந்தும்
     தன் கொடி 
நிலைநாட்டிய
     போர்  வாள்...!

அன்புக்காக
     அரியணை 
துறந்த
      இளம்  துறவி..!

எம் மதமும்  
     சம்மதமென
வாழ்ந்து  சென்ற
    வள்ளல்..!

நட்புக்காக  தன்
      உயிரையும்
துச்சமென
      நினைத்த சமுத்ரா
தேவியின்  மகன் ...!

வறுமையின்றியும்
       வான்முட்டும்
கோபுரமைத்த
       உலக விந்தை ...!

மக்கள்
        மனதிலும் தன் 
தாய் தந்தையர்  
       இருதயத்திலும்
நீங்காமல் நிலைத்திருந்த
       கோமகன்..!

தரணியின்
      பொற்காலம்  தோன்ற
அப்பொன்னி தேவியே
        உயிர்  கொடுத்த
தவப் புதல்வன் ...!

Thursday, 7 May 2020

அருவி

தூங்கும் அருவியும்
         துயில் கலைக்கும்
காலைக் கதிரவனும்
        தோகை விரித்து நின்ற
மயிலும்
         தோன்றி மறைந்த
வானவில்லும்...!

விட்டு விட்டு
      பொழிகின்ற
வானிலையும் அங்கே
      மென்மையாய்
ஷ்பரிசம் தொட்டு
      செல்லும் - ஈரக்
காற்றும்...!

மலை மீது மோதி
     திரும்புகின்ற
மேகங்களும்
     திசைமாறாமல்
பயணிக்கின்ற
     நதி நீரும்...!

துள்ளிக் குதித்தோடும்
      மீன் குஞ்சுகளும்
மவுனமாய்
      தூரத்தில் இரை தேடி
காத்திருக்கும்
      முதலையும்...!

நீண்டு நெடுந்துயர்ந்த
       மரங்களும்
தன் கூட்டருகே
      பறந்து வந்த
பருந்து கண்டு
     ஆர்பரிக்கும்
பறவைக்  கூட்டமும்...!

தாயின் முகம்
     பார்த்து
புன்னகைக்கும்
      குழந்தையும்
மனம் மயங்கும்
      வண்ணத்தில்
புதிதாய்
       பிறந்திருந்த
பூக்களும் சேர்ந்து
      வனப்பூட்டின
அவ் வான்மகளின்
     குழந்தைக்கு...!

Friday, 21 December 2018

முல்லிவாய்க்கால்

திரும்பிய
      திசையெங்கும்
தீண்டிய
      தோட்டாக்கள் - உன்னை
துளைத்தெடுத்தும்
      திரும்பி ஓடா
போர் குணம்...!

துரோகத்தில்
       திகைத்து
மரணத்தை
       தழுவினாலும்
மண்ணை
      விட்டுத்தராத - உந்தன்
மனித மாண்பு...!

பிரிந்த உன்
     மூச்சுக்காற்று
சலசலத்தது -  தாய்
      மண்ணின் மீது - நீ
கொண்ட காதலின்
      கதை சொல்லி...!

தேடல் இருக்கும் வரை
      வாழ்வு முடிவதில்லை
விடியல் இருக்கும் வரை
      வீரம் வீழ்வதில்லை
வரலாறு இருக்கு மட்டும்
       உங்கள் கால்தடம்
மறைவதுவுமில்லை...!

Friday, 11 May 2018

இருள் உலகம்

அரை நிலவும்
        அன்றதனை
சூழ்ந்து நின்ற
         நட்சத்திர ஒளியும்
சலவைக்கல் பதித்த
        மதில் சுவராய்
இரவென்னும்
         கோட்டையில்...!

இடைவிடாது
        பொழிகின்ற
பனித்துளியும் - அப்
        பகலவன்
விட்டு சென்ற
       கதகதப்பை
இறகுக்குள்
       இருக்கிக்கொண்ட
பறவைக்
       கூட்டமும்...!

மெல்ல மெல்ல
       ஸ்பரிசம்
தொட்டு சென்ற
       தென்றலும் - அங்கே
மென்மையை
        மெருகேற்றும்
தென்னையின்
       கீற்றுக்கிடையேயான
ஒளி முறிவும்
       அழகாகிற்று - இவ்
இருள் உலகை...!