Sunday, 24 May 2020

இயற்கையும் மனிதனும்

இலை கொடிகளுக்கு
      உயிர் கொடுத்த
மழைத்துளிகள்
      மெல்ல மெல்ல அதன்
சலசலப்பை கூட்டி சென்ற
      தென்றல் காற்று...!

கூடுகள் தோறும்
        பிஞ்சிப் பறவைகளின்
கீச்சுக் குரல்
       இரைதேடச்செல்லும்
தாய் பறவையின்
       பிரிவு தாளாமல்...!

கண்ணுக்கு தெரியாத
        விஷக்கிருமியில்
காற்றும் விஷமாகும்
        வருத்தத்தில்
மனித இனம்
         பயந்து கிடக்க...!

வாழ்வு என்று முடியும்
          வருத்தமில்லா
தோரணையில்
           இயற்கை மட்டும் - தன்
இயல்பு மாறாது
        மாறிக்கொண்டிருக்கிறது...!

வாழத் தெரியாத
       வழித்தடத்தில்
மனித இனம்
        வதை பட்டிருக்க
எத்தனையோ
         யுகங்கள் கடந்த
 பட்டறிவுதான்
        உந்தன் சாந்த
சாம்ராஜ்ஜியத்தின்
        வெளிப்பாடோ...!

Friday, 22 May 2020

வழித்தடம்

பூத்த மலர்கள்
        கனத்த காற்றின்
வலிமையில்
       வழியெங்கும்
சிதறிக்கிடக்க...!

காலைப் பொழுதின்
        புத்துணர்ச்சியில்
கீச்சுக்குரல் இட்டு
        இங்கும் அங்கும்
ஓடித்திரிந்த
        அணில் பிள்ளை...!

மென் பனி
        விலகி
கதிரவன்
         மென் ஒளியை
கிரகித்து
        புன்முறுவல் பூத்த
இலைகளின்
        புதுவரவு...!

மின்னுகின்ற
       வழித்தடத்தில்
வரிசையாய்
       வந்து நின்ற
மகிழ்வுந்துகளும் அதன்
       முன்விளக்கு
ஒளி பட்டு
       பிரதிபலித்த
நல்வரவு
        வாசகமும்...!

Saturday, 9 May 2020

ராஜ ராஜ சோழன்

கடல்  கடந்தும்
     தன் கொடி 
நிலைநாட்டிய
     போர்  வாள்...!

அன்புக்காக
     அரியணை 
துறந்த
      இளம்  துறவி..!

எம் மதமும்  
     சம்மதமென
வாழ்ந்து  சென்ற
    வள்ளல்..!

நட்புக்காக  தன்
      உயிரையும்
துச்சமென
      நினைத்த சமுத்ரா
தேவியின்  மகன் ...!

வறுமையின்றியும்
       வான்முட்டும்
கோபுரமைத்த
       உலக விந்தை ...!

மக்கள்
        மனதிலும் தன் 
தாய் தந்தையர்  
       இருதயத்திலும்
நீங்காமல் நிலைத்திருந்த
       கோமகன்..!

தரணியின்
      பொற்காலம்  தோன்ற
அப்பொன்னி தேவியே
        உயிர்  கொடுத்த
தவப் புதல்வன் ...!

Thursday, 7 May 2020

அருவி

தூங்கும் அருவியும்
         துயில் கலைக்கும்
காலைக் கதிரவனும்
        தோகை விரித்து நின்ற
மயிலும்
         தோன்றி மறைந்த
வானவில்லும்...!

விட்டு விட்டு
      பொழிகின்ற
வானிலையும் அங்கே
      மென்மையாய்
ஷ்பரிசம் தொட்டு
      செல்லும் - ஈரக்
காற்றும்...!

மலை மீது மோதி
     திரும்புகின்ற
மேகங்களும்
     திசைமாறாமல்
பயணிக்கின்ற
     நதி நீரும்...!

துள்ளிக் குதித்தோடும்
      மீன் குஞ்சுகளும்
மவுனமாய்
      தூரத்தில் இரை தேடி
காத்திருக்கும்
      முதலையும்...!

நீண்டு நெடுந்துயர்ந்த
       மரங்களும்
தன் கூட்டருகே
      பறந்து வந்த
பருந்து கண்டு
     ஆர்பரிக்கும்
பறவைக்  கூட்டமும்...!

தாயின் முகம்
     பார்த்து
புன்னகைக்கும்
      குழந்தையும்
மனம் மயங்கும்
      வண்ணத்தில்
புதிதாய்
       பிறந்திருந்த
பூக்களும் சேர்ந்து
      வனப்பூட்டின
அவ் வான்மகளின்
     குழந்தைக்கு...!