Saturday, 25 November 2017

மண்ணுலகம் (ம) பூமி

பகலவனை
       பிரிந்தாலும்
இட வலமாய்
       சுழன்றாலும்
இருள் பகலாய்
       தொடர்ந்தாலும்
 ஊன் உயிர் வாழும்
       கருவறை நீ...!

நிலமும்
      நீலக்கடலும்
இம்மலையும்
      காடுகளும் - அவ்
வறண்டு விட்ட
      வனங்களும்
நீ உடுத்திய
      வண்ண உடைகள்...!

ஆழ்கடலென
       தாழ்வதும்
இமையமாய்
     வளர்வதும்
அக்னியாய்
      எரிப்பதும்
சூறாவளியாய்
       சுழல்வதும்
கார்மேகமாகி
       பொழிவதும்
உந்தன் சமநிலையின்
       வெளிப்பாடு...!

விழுந்தாலும்
       இங்கேயே
விதைக்கப்பட்டவர்களாய்
       வாழ்கிறோம்
உந்தன்
      கண்ணிமைக்குள்...!

Friday, 9 June 2017

மண்தான் நமது பலம்

அன்னமிட்ட தாயின்
       கருவறை அறுக்கும்
அரங்கேற்றம் - இன்று
      கதிராமங்கலத்தில்...!

கண்ணிருந்தும்
      குருடனாய் - நாம்
வரவேற்கும் மற்றுமொறு
       சோமாலியா
 என்றோ
       விலைப்போன
  நம் ஒற்றை
       துருப்புச்சீட்டால்…!

மண்தான்
      நமது பலம்
அச்சடித்த
     காகிதமல்ல
காலத்தே
      பொழிகின்ற மழைதான்
நமது  வளர்ச்சி
      மாற்றமே  உருக்கொண்ட
அட்டவணையில்
      மேலெழுவதல்ல…!

Saturday, 3 June 2017

நடை வண்டி

ஒளித்துகள்கள்
       அங்கு திரையிட
சந்திரத் தென்றல் என
       பொறிக்கப்பட்ட
மைல் கல் - அருகிலே
        தலை நிமிர்ந்து
கொக்கரித்த சேவல்...!

தெருவெங்கும்
        அராவாரம்
திண்ணைதோறும்
       முதியவர் கூட்டம்
திசையரியா
       மழலையின்
முகம் நனைத்த
       கண்ணீர் துளி...!

முகம் பார்ப்பதற்குள்
       முழுதாய் நேசித்தவள்
ஓடிவந்து
       விட்டுச் சென்ற
 நடை வண்டி...!

பகலவனை கண்ட
      பனித்துளியாய்
தொலைந்து போன
      கண்ணீர் துளியும்
நடை பழகிய
     கால்களில்
வலுத்துவிட்ட  உற்ச்சாகமும்...!

Saturday, 28 January 2017

எழுந்து வா

எழுந்து வா தமிழா
        எழுந்து வா...!

உனக்காக
        அழுகின்ற கண்கள்
உந்தன் வீரம்
        பேசும் தூரம்
வெகு தொலைவில்
         இல்லை...!

ஏந்திய தழும்புகள்
       காலம் தாண்டியும்
உன்னில் உறைகின்ற
      போராட்டக் குணத்தின்
காலச் சுவடுகள்...!

பகையினை
       மறந்துவிடு - அது
சுயநலத்தின்
      உச்சம் - நீயோ
நற்சமுதாயத்தின்
      விருச்சம்...!

எழுந்து வா தமிழா
        எழுந்து வா...!

Friday, 20 January 2017

உரிமை போராட்டம்

உரிமைகள் மறுக்கப்பட்ட
      உணர்வுகளில்
இணைந்துவிட்ட  நெஞ்சங்கள்
      உருவம் கொடுக்க
நினைவிலிருந்து நீங்காத
      அறப் போர்...!

மண் சார்ந்த
     மரபுகளை
மீட்டெடுக்க
     எழுச்சிக் கொண்ட
சமூகம்...!

பொதுவுடைமைகள் -  இங்கு
       உடைக்கப்படவில்லை
அரியணையின்
        இறுகிய  மனங்கள் மட்டும்
கரைக்கப்படுகின்றன...!

அன்றாடம் வாழ
      வழி செய்தவனின்
வீழ்ச்சி  - இங்கு
      வேண்டாமென
வலுக்கின்ற
        போராட்டம்...!