Saturday, 28 January 2017

எழுந்து வா

எழுந்து வா தமிழா
        எழுந்து வா...!

உனக்காக
        அழுகின்ற கண்கள்
உந்தன் வீரம்
        பேசும் தூரம்
வெகு தொலைவில்
         இல்லை...!

ஏந்திய தழும்புகள்
       காலம் தாண்டியும்
உன்னில் உறைகின்ற
      போராட்டக் குணத்தின்
காலச் சுவடுகள்...!

பகையினை
       மறந்துவிடு - அது
சுயநலத்தின்
      உச்சம் - நீயோ
நற்சமுதாயத்தின்
      விருச்சம்...!

எழுந்து வா தமிழா
        எழுந்து வா...!

Friday, 20 January 2017

உரிமை போராட்டம்

உரிமைகள் மறுக்கப்பட்ட
      உணர்வுகளில்
இணைந்துவிட்ட  நெஞ்சங்கள்
      உருவம் கொடுக்க
நினைவிலிருந்து நீங்காத
      அறப் போர்...!

மண் சார்ந்த
     மரபுகளை
மீட்டெடுக்க
     எழுச்சிக் கொண்ட
சமூகம்...!

பொதுவுடைமைகள் -  இங்கு
       உடைக்கப்படவில்லை
அரியணையின்
        இறுகிய  மனங்கள் மட்டும்
கரைக்கப்படுகின்றன...!

அன்றாடம் வாழ
      வழி செய்தவனின்
வீழ்ச்சி  - இங்கு
      வேண்டாமென
வலுக்கின்ற
        போராட்டம்...!

Friday, 25 November 2016

வசந்தம் வரும்

வரம் கிடைக்கு முன்னே
      விரதமெனும் வதைபாடு
இருள் விலகும் முன்னே
      வளம்வரும் சலசலப்பு
நன்மையின் தொடக்கத்தின்
      தீய்மையின் துடிதுடிப்பு...!

வலி உள்ளவர்களின்
       கூச்சல் குரல்
 தினம் தினம் - இங்கு
       ஓங்கி ஒலிக்க...!
   
வதைபடும் கூட்டத்தின்
       கண்களில்
ஏற்றிவத்த கனவுகள்
      கலையாமல்
காக்கின்ற தலைவனின்
      கரங்களின்
வலிமை கூடட்டும்...!

 கருப்பு தாள்கள்
        இங்கு குறையுமோ
இல்லையோ
       எற்றத் தாழ்வுகள்
குறைகின்ற பாதையின்
      முதல் அடி - இன்று
வலியானாலும்
     வசந்தம் வரும்...!

Wednesday, 13 April 2016

மருத்துவம்

இருகண்ணும்
       தொலைந்து போகும்
மை இருட்டு
      இடைவிடாது
கொட்டிச் சென்ற
       கோடை மழை...!

தீண்டிய நாகத்தின்
      திசையறியா
திகைப்பு - அங்கே
     வேய்ந்துவிட்ட கூரை
ஈரக்கற்றில்
     உருவாக்கிய சலசலப்பு...!

யாருமற்ற சாலைகள்
      எமனது வருகையென
ஓலமிட்ட
      மக்கள் கூட்டம்...!

தோகையின்றியும்
      வாசல் வந்த
தேவதை  - துடைத்துச்
       சென்ற கண்ணீர்
துளிகள்...!

Tuesday, 6 October 2015

மருந்து

விடியும் முன்னே
      ஏற்றிவைத்த தீபங்களாய்
அந் நட்சத்திரக்
     கூட்டம்...!

காலைக் கதிரவனின்
     கதகதப்பில்
மறைந்து போகும்
     பனித் துளிகள்...!

மேகம் கறுக்கு
    முன்னே
தோகை விரித்த
     மயில்...!

துலாபாரத்தில்
    வீற்றிருந்தும்
விடாமல் புன்னகைத்த
    சிறுமி...!

தோற்றம் தாண்டி   
     தோள் கொடுக்கும்
தோழனும் - அங்கே
     உயிர் காக்க
ஏழை கொடுத்துவிட்ட
    ஒரு குவளை
தண்ணீரும்...!