Thursday, 19 February 2015

இனிமை

மரங்களின் வெறுமை
       வானத்தின் வெளுப்பு
இமை வருடிய காற்று
      முகம் காட்டா குயில்
கொண்டுவந்த கானம்
      நதிமகளின் தாலாட்டில்
மிதந்து வந்த
     புல்லாங்குழல் - அங்கும்
போட்டியிட்ட மூங்கில்
      உருவாக்கிய சங்கீதம்...!

மின்னலின் கீற்று
       தொட்டுச்சென்ற
மலை முகடு
       வீதியெங்கும்
ஒன்றிரண்டாய்
       விதைக்கப்பட்ட
மழைத்துளிகள்
        இலையுதிர் காலத்திலும்
உதிராத நினைவுகள்
       எடுத்துவந்த சந்தோசமாய்
விட்டு விட்டுப் பேசிய - அம்
        மழலையின் குரலினிமை...!

Thursday, 12 February 2015

கொடியும் சிறுவனும்

முகம் மறைக்கும்
    உறை பனி
காற்றில் மிதந்து வந்த
       மித மழைச் சாரல்
அங்கே
       நேசமும் தூய்மையும்
நிறைந்த சிறுவனின்
        நெஞ்சம் சுமந்திருந்த
மூவர்ணக்கொடி...!


மண்ணின் மரபுகளை
        நினைவுக்கு கொண்டுவரும்
முப்படையின் முழக்கம்
       முன் நிற்க
அன்னையின் அன்பினில்
      அசைந்தாடும்
பிள்ளையைப் போல்
      அசைந்திருந்த
மூவர்ணக்கொடி...!

கண்டிருந்த சிறுவனின்
       கண்களில் தாய்மண்ணின்
பெருமை கண்ட
      கர்வம் கொட்டி கிடக்க
அவன் கால்களிலோ
      அழுக்கான
மனங்கள் தரும்
     நெருக்கடியில்
நடக்காத தோரணை...!