Saturday, 26 January 2013

மாலை மயக்கம்

அரை முற்றத்தில்
          முழு முகம் காட்டும்
வெண்ணிலவு - அதன்
          அழகின் மயக்கத்தில்
முத்தமிட்டுச் செல்லும்
          இரும்புப் பறவை...!

வானத்தின் வனப்பில்
         வட்டமிட்டு இறகடித்துப்
பறக்கும் புறாக்கள் - அதன்
         இறகில் குடிகொண்டு
வாழத் துடித்து
         படபடக்கின்ற கண்ணிமைகள்...!

வீதியெங்கும் விட்டுவிட்டு
        எரிகின்ற மின்விளக்கு
போட்டியிட்டு விழி திறக்கின்ற
        விண்மீன் கூட்டம்...!

Friday, 25 January 2013

இரு துருவம்

நாடி பிடித்து பார்க்கா
        நாசிக்குள் நுழைக்கின்ற
சுவாசக்காற்றாய்
         உறவுகள்...!

உண்மையாகும் போது
        உயிர் வாழும்
உடல் நரம்பில் கலந்துவிட்ட
       மூச்சுக் காற்றாய்...!

மூழ்கிப் போகையில்
        உருத்துவிட்ட வலியில்
தொட்டுவிட்ட மென்மையால்
        துரத்தியடிக்கப் பட்ட
தும்மல் காற்றாய்...!

Friday, 18 January 2013

குளக்கரை

மிதக்கின்ற தாமரை
      சூழ்ந்து அலங்கரிக்கின்ற
அல்லிப் பூக்கள்...!

வீசுகின்ற திசையறியா
     குழம்பிய குழப்பத்தில்
கரைத்தொடுகின்ற அலைகள்...!

விழுகின்ற ஒளிக்கதிரில்
      உருவத்தின்
ஒடிந்த தோற்றம்...!

களிமண் சேற்றில்
      பிஞ்சு தடங்களின்
கலையுருவம்...!

தனிமை என்றாலும்
      தயங்காது உதவுகின்ற
சலவைக் கல்...!

கரையோர நீர்வலத்தில்
      நீண்டு தலை குனிந்த
நெற்க்கதிர்கள்...!

ஊஞ்சல் கொண்டு
      தாலாட்டிய
ஆலம் விழுதுகள்...!

வனத்திற்க்கு வனப்பூட்டும்
      வண்ண வண்ணப் பறவைகளும்
நிஜமான ஆதாரமென
      நீந்துகின்ற உயிரினத்தின்
நிஜ உலகமும்...!

Saturday, 5 January 2013

புகலிடம்

சந்தோசத்தின்
        சிதறலை மட்டும்
சித்திரங்களாய்
        சேர்க்கத் தெரிந்த
சிந்தனை...!

வாழ்வில் வதைப்பட்ட
       வன் மனத்தை
வருடுகின்ற
        வானவில்...!

தடுமாறி விழுகையில்
        தாங்கி பிடித்து
தாலாட்ட - தயங்காத
        தாய் மடி...!

 வசந்தமானாலும்
        வருத்தமானாலும்
வண்ணப்பறவைகளின்
        விருப்பமான
வேடந்தாங்களாய்
           இப்புகலிடம்...!

Friday, 28 December 2012

கிருஸ்துமஸ்

 திகைக்கின்ற இருட்டுக்குள்
       தீமைகள் பரவியிருக்க
வாழ்விற்க்கு வழிகாட்டும்
       ஒளி பிறந்த நன்நாள்...!

கண்-பார்வை குறைபாட்டினில்
       கலங்கிய கன்னித்தாயினுடைய
கலக்கங்கள் கரைந்த
        காலைப் பொழுதினில்...!

தேவதைகள் வழி காட்ட
        தொழுவத்தில் பிறந்தாலும்
திளைக்கின்ற ஆனந்தத்தில்
       அறிமுகப் படுத்தப்பட்ட
நாயகன்...!

சிலுவையில் அறையப்பட்டாலும்
         அடிமை அல்ல
ஆணைக்கு அடி பணியா
         ஆருயிர்க் காவலன்...!

அன்பினில் வாழ்ந்து
        இருள் விலக - அன்றே
ஆலயத்தில் ஏற்றப்பட்ட
        அகல் விளக்கு...!